பஞ்சாபில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்து, 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனாலும், அம்மாநிலத்தவர்களுக்கு, "ஏகே-47' மீதுள்ள மோகம் குறைந்தபாடில்லை. ஸ்கூட்டருக்கு, ஏகே - 47 என்ற பதிவு எண்ணை வாங்குவதற்காக, அம்மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி, ஏழு லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார்.
"அவ்டோமேட் கலாஸ்நிகோவ்' என்ற, ரஷ்ய நாட்டவர் கண்டுபிடித்த, துப்பாக்கிக்கு, அவர் பெயரையே சுருக்கி, ஏகே-47 என்ற பெயர் வழங்கப்பட்டது. அந்த கால கட்டத்திலும், இப்போதும், இது புகழ் பெற்று விளங்குகிறது. பஞ்சாபில், பயங்கரவாதம் தலை விரித்தாடிய காலங்களில், இந்த ரக துப்பாக்கிகளைத் தான் பயங்கரவாதிகள் அதிகம் பயன்படுத்தினர். பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர், குல்பீர்; விவசாயி, சமீபத்தில், "ஆக்டிவா' ஸ்கூட்டர் ஒன்றை, 53 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார். இதற்கு, ஏகே-47 என்ற, வாகன பதிவு எண்ணை வாங்க ஆசைப்பட்டார். ஆனால், அதே எண்ணைப் பெற, வேறு பலரும் போட்டி போட்டனர். அதனால், அந்த பதிவு எண்ணை ஏலத்தில் விட, ஹோஷியார்பூர் மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். ஏலத்தில், 16 பேர் பங்கேற்றனர். இறுதியில், "பிபி-07,ஏகே-47' என்ற பதிவு எண்ணை, 7 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார் குல்பீர்.
ஏலத்தில் வெற்றி பெற்ற, விவசாயி குல்பீர் கூறியதாவது: இத்தாலியில் வசிக்கும் என் சகோதரரும், அமெரிக்காவில் வசிக்கும் என் உறவினரும், "எவ்வளவு விலை கொடுத்தாவது, இந்த பதிவு எண்ணை வாங்கி விடுங்கள்' என, உற்சாகம் அளித்தனர். 13 லட்சம் ரூபாய் வரை, ஏலம் போயிருந்தால் கூட, அந்த எண்ணை நான் வாங்கியிருப்பேன். இந்த எண் மிகவும் பிரபலமானது மற்றும் தனித்தன்மை வாய்ந்தது. ஏற்கனவே, என்னிடம் உள்ள இரண்டு வாகனங்களின் பதிவு எண் - 47 என, உள்ளது. இருந்தாலும், ஏகே-47க்காக, என்ன விலை கொடுக்கவும் நாங்கள் தயாராக இருந்தோம். என்னிடம், "ஸ்கோடா லாரா' கார் தற்போது உள்ளது. விரைவில், "டொயோட்டா' நிறுவன தயாரிப்பான, "பார்சூனர்' கார் வாங்க உள்ளேன். அந்த காருக்கு, இந்த பதிவு எண்ணை மாற்றுவேன். இவ்வாறு குல்பீர் கூறினார். பதிவு எண்ணுக்கான ஏலத்தில், குல்பீர் வெற்றி பெற்றதும், அவரது மனைவியும், மகள்களும் அண்டை வீடுகளில் வசிப்போருக்கு, இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

No comments:
Post a Comment